புதுடெல்லி: 2019ம் ஆண்டு தொடங்கி 2 வாரத்தில் நாட்டில் 1,694 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகம் பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஜனவரி 17ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 1,036 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், அதில் நேற்று வரை 54 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தில் கடந்த 2 வாரங்களில் 210 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து டெல்லியில் 168 பேரும், ஹரியானாவில் 128 பேரும், தெலுங்கானாவில் 107 பேரும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு தொடங்கியது முதல் தமிழகத்தில் 48 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.