திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் மைக்கேல் போனில் பேச அனுமதி

புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் வெளிநாட்டில் உள்ள தனது குடும்பத்தினருடன் போனில் பேச டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கடந்த காங்கிரஸ் ஆட்சியில், விவிஐபிக்களுக்கான ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் இடைத்தரகராக செயல்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல், கடந்த டிசம்பர் மாதம் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரிக்கிறது. தற்போது அவர் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வெளிநாட்டில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் வக்கீலுடன் பேச சிறை நிர்வாகம் அனுமதி மறுப்பதாக கூறி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார், வாரத்தில் 15 நிமிடம் மைக்கேல் வெளிநாட்டில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் வக்கீலுடன் பேச அனுமதி அளித்து உத்தரவிட்டார். முன்னதாக, அமலாக்கத்துறை விசாரணையின் போது மைக்கேல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் பெயர்களை சூசகமாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: