சென்னை: ரவுடியை கைது செய்யாமல் இருக்க, அவனது சகோதரனிடம், 5 லட்சம் ரூபாய், லஞ்சம் கேட்டு, ‘டீலிங்’ பேசிய, போலீஸ் உதவி கமிஷனர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் குரல் பரிசோதனை நடந்த திட்டமிட்டுள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், முத்தழகு. இவர், தமிழக காவல் துறையில், 1987ல், எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தார். பதவி உயர்வுக்கு பின், 2017, ஜூலை, 7 - 2018, மே 3 வரை, சென்னை, தேனாம்பேட்டை உதவி கமிஷனராக பணியாற்றி வந்தார். அவர், தேனாம்பேட்டையில் பணியாற்றியபோது, அந்தப் பகுதியில் வசித்து வரும், ராமநாதபுரம் சமஸ்தான வாரிசான, கார்த்திக் சேதுபதி என்பவரை கடத்தி, சொத்தை அபகரிக்க முயற்சி நடந்தது. இது தொடர்பான வழக்கை முத்தழகு விசாரித்து வந்தார். அப்போது கார்த்திக் சேதுபதியை, தீர்த்து கட்டும் திட்டத்துடன், தேனாம் பேட்டையில் உள்ள, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பதுங்கி இருந்த, ரவுடி, ‘ராக்கெட்’ ராஜா உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின், கூட்டாளி ஒருவனை கைது செய்யாமல் இருக்க, முத்தழகு, அவனது சகோதரனிடம், 5 லட்சம் ரூபாய் ‘டீலிங்’ பேசி, 3.50 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.