சத்தியமங்கலம்: பண்ணாரி வன சோதனைச் சாவடியில் சோதனை அடிப்படையில் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டண ரசீது வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சாலையாக இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது.தற்போது இந்த சாலையில் வன உயிரின சரணாலயமாக இருந்த வனப்பகுதி கடந்த 2013 ல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புலிகள் காப்பகத்தில் பல்வேறு மேம்பாட்டு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் வாகனங்களுக்கும் கர்நாடகாவிலிருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களுக்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் உள்ள சாலையில் பயணிக்க நுழைவுக்கட்டணம் விதிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.