சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலியாக ஓட்டல்களில் பார்சல் உணவுகள் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, உணவுடன் பைகளுக்கு ரூ.5 கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று முதல் உணவு பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் உள்ள காகித குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்பப்படும் பைகள், பொட்டலங்கள், பிளாஸ்டிக் கொடிகள், மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் காகிதங்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், தெர்மகோல் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள் என்று 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் நேற்று முதல் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர். பிளாஸ்டிக் தடையால் பெருமளவில் பாதிக்கப்படுவது சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள் தான். ஓட்டல்களில் சாம்பார், சட்னி, சாப்பாடு, இட்லி, தோசை என்ற அனைத்து உணவு பொருட்களும் பிளாஸ்டிக் பைகளை கொண்டு தான் கட்டி கொடுக்கப்பட்டது.