புதுடெல்லி: இமயமலை சுற்றுச்சூழல் குறித்த விரிவான ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்ற மதிப்பீட்டு நிலைக்குழு தனது பரிந்துரை அறிக்கையில் கூறியுள்ளதாவது: இமயமலையில் கடந்த 40 ஆண்டுகளில் 13 சதவீத அளவுக்கு பனிப்பாறைகள் உருகிவிட்டன. இதன் காரணமாக 443 பில்லியன் டன் பனிக்கட்டிகள் மாயமாகியுள்ளது. தொடர்ந்து இமயமலையின் பனிப்பாறைகள் உருகி வருவது அபாய எச்சரிக்கை ஆகும். இதனை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுப்பது அவசியமாகும். இதற்காக இமயலையில் சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படுத்த வேண்டும். நிபுணர்களை கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் வகையில் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இமயமலையை பாதுகாக்க சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிடம் இருந்து ஒத்துழைப்பை பெற வேண்டும். கிடைக்காதபட்சத்தில் குறைந்தபட்சம் இமயமலையுடன் தொடர்புடைய நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.