மன்னார்குடி: கஜா புயல் கடந்து 1 மாதமாகியும் மின்சாரம், குடிநீர் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடாத அதிகாரிகளை கண்டித்து 4 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கஜா புயல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. 1 மாதத்தை கடந்தும் இடைச்சிமூலை, ஆவிடைதேவன் குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. மின் இணைப்புகள் சீரமைக்கப்படவில்லை. சேதத்தை கணக்கீடு செய்வதற்கு கூட அதிகாரிகள் வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில், உடனே மின் வசதி கொடுக்க வேண்டும். குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும். பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைச்சிமூலை, ஆவிடைதேவன் குளம் கிராமங்களை சேர்ந்த மக்கள் இரண்டு இடங்களில் மன்னார்குடி-முத்துப்பேட்டை இடையிலான மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமாதானத்துக்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர்.