சென்னை: சேலம் பூலவாரி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தங்கள் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ரூ.7 லட்சம் செலவில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்கூடம் முன், பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக அதிமுகவினர் கொடி கம்பம் ஒன்றை அமைத்துள்ளனர். எனவே இந்த கொடி கம்பத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தநிலையில் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த கொடிக்கம்பத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும், நெடுஞ்சாலைகள் சட்டத்தை மீறி, கொடிக்கம்பம் அமைக்க நெடுஞ்சாலைகள் துறை சேலம் மண்டல பொறியாளர் அனுமதியளித்துள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக உரிய ஆவண ஆதாரங்களுடன் நேரில் ஆஜராக சேலம் மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத் துறை மண்டல பொறியாளருக்கு உத்தரவிட்டனர்.