புனே: புனேயில் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயின் சக்கான் சிக்ராபூர் ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹர்பல் சிங்நாயக்(42) என்பவர் ஆயுதம் வைத்திருந்ததாக மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையால் கைது செய்யப்பட்டார். அவர் டிரெய்லர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். கோர்ட் உத்தரப்படி போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் காலிஸ்தான் (சீக்கிய தீவிரவாத அமைப்பு) ஆதரவாளர் என்பது தெரிய வந்தது. அவர் சமூக வலைத்தளத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். அதோடு ஆயுதங்களை வாங்கவும், இளைஞர்களை தீவிரவாத செயலில் ஈடுபடவும் தூண்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை 17ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.