அடிலெய்டு: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான அடிலெய்டு மைதான ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் புற்களுடன் கூடியதாக இருக்கும் என்று பராமரிப்பாளர் டேமியன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து 4 போட்டிகள் கொண்ட கடினமான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு சவாலாக விளைங்கும் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அடிலெய்டு மைதான ஆடுகள பராமரிப்பாளர் டேமியன் ஹாப் கூறியதாவது:இந்த மைதானத்தில் கடைசியாக 3 பகல்/இரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டதால், பந்து முழுமையாக 80 ஓவர் தாக்குப்பிடிக்கும் வகையில் ஆடுகளத்தில் லேசாக புற்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம். தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் போட்டி பகல் ஆட்டமாக நடைபெற்றாலும், ஆடுகள அமைப்பில் எந்த வித மாற்றமும் இருக்காது.