தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு முதல் முறையாக பெரிய சரக்கு கப்பல் வந்தது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பெரிய கப்பல்கள் வருவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதனால் கடந்த மாதம் 77 ஆயிரம் மெட்ரிக் டன் சரக்குடன் ஒரு கப்பல் வந்தது. இந்நிலையில் அந்த கப்பலை விட பெரிய கப்பலான ஜியோர் ஜியோ அவினோ என்ற சரக்கு கப்பல் நேற்று முன்தினம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 229.2 மீட்டர் நீளமும், 38 மீட்டர் அகலமும், 14 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. இந்த கப்பல் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள மினா சாகர் துறைமுகத்தில் இருந்து 82 ஆயிரத்து 170 டன் சுண்ணாம்பு கல் ஏற்றிக் கொண்டு வந்தது.