திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரளா துணையாக இருக்கும். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு குடிநீர், தார்ப்பாய், மெழுகுவர்த்திகள், உலர் உணவு பொருட்கள், ஆடைகள் அனுப்பி வைக்கப்படும். கேரள மாநில இயற்கைப் பேரிடர் மீட்பு மையம் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும். இவ்வாறு பினராய் விஜயன் கூறியுள்ளார். கேரளாவில் சமீபத்தில் கனமழை கொட்டித்தீர்த்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது தமிழக மக்கள் அம்மாநில மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். ஏராளமானவர்கள், கேரள அரசின் முதல்வர் நிவாரண நிதிக்கு பெருமளவில் நிதி அளித்தனர். அதனை பெருந்தன்மையுடன் பத்திரிகைகளில் தெரிவித்த முதல்வர் பினராய் விஜயன், இப்போது பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார்.