பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே, பூப்பெய்தியதால் தனி குடிசையில் தங்கிய சிறுமி புயலுக்கு பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பானுமதி. அங்குள்ள ஒரு தென்னந்தோப்பில் கூலி வேலை செய்கின்றனர். அந்த தோப்பிலேயே குடிசையில் வசிக்கின்றனர். இவர்களின் ஒரே மகள் விஜயலட்சுமி என்கிற விஜயா (14). கடந்த 13ம் தேதி பூப்பெய்தினார். இந்து முறைப்படி வீட்டுக்கு எதிரே சில தென்னை ஓலைகளை வைத்து தனி குடிசை கட்டி விஜயாவை தங்க வைத்திருந்தனர். 3 நாட்கள் கழித்து தண்ணீர் ஊற்றி சம்பிரதாயங்கள் நடத்திய பின் வீட்டுக்குள் அழைக்க திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி அதிகாலை வேதாரண்யத்தில் தாக்குதல் நடத்தி பட்டுக்கோட்டை பகுதிக்கு வந்த கஜா புயலின் கோரதாண்டவத்தில் அதிகாலை 3 மணி அளவில் ஒரு தென்னைமரம் அந்த குடிசை மீது விழுந்தது. அது தூங்கி கொண்டிருந்த விஜயாவின் மார்பிலேயே விழுந்து அமுக்கியது.