கண்டி: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் ரோஷன் சில்வாவின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இலங்கை அணி முன்னிலை பெற்றது. பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 285 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இலங்கை முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ரன்களுடன் இருந்தது. கருணாரத்னே 19, புஷ்பகுமாரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் புஷ்பகுமாரா (4), மொயீன் அலி சுழலில் ஆட்டமிழந்தார். ஆனாலும், கருணாரத்னே, தனஞ்ஜெயா டிசில்வா இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு கைகொடுத்தனர். இந்த ஜோடி 96 ரன் சேர்த்த நிலையில் கருணாரத்னே (63) ரன் அவுட்டானார். பின்னர் தனஞ்ஜெயா (59), மேத்யூஸ் (20) இருவரும் ரஷித் பந்திலும், மெண்டிஸ் (1) லீச் பந்திலும் வெளியேற மீண்டும் தடுமாற்றம் ஏற்பட்டது. 165 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்த நிலையில் ரோஷன் சில்வா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.