கோவை: 5 மாநில தேர்தலை புறக்கணிப்போம் என கோவை கோர்ட் வளாகத்தில் மாவோயிஸ்ட்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கருமத்தம்பட்டியில் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ரூபேஸ், அவரது மனைவி ஷைனி, வீரமணி, அனுப், கண்ணன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரூபேஸ் திருச்சூர் சிறையிலும் மற்றவர்கள் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு கோவை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து வீரமணி, கண்ணன், அனுப் ஆகியோரும், திருச்சூர் சிறையில் இருந்து ரூபேசும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். ஜாமீனில் உள்ள ரூபேஸின் மனைவி ஷைனியும் கோர்ட்டில் ஆஜராக வந்தார். அப்போது, ‘‘5 மாநில தேர்தல்களை புறக்கணிப்போம்’’ என நீதிமன்ற வளாகத்தில் ரூபேஸ், வீரமணி, கண்ணன், அனுப் ஆகியோர் கோஷங்களை எழுப்பினர். இதனால் கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இவ்வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 16 தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி