அபுதாபி: அபுதாபியில் குறிப்பிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தும் ரோந்து போலீசார், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பரிசு வழங்கி பாராட்டி வருகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில், ரோந்து செல்லும் போலீசார் அவ்வப்போது குறிப்பிட்ட சில வாகனங்களை தடுத்து நிறுத்துகின்றனர். வாகன ஓட்டிகள் என்னவோ, ஏதோ, அபராதம் விதிக்கப்போகிறார்களோ என்று பயந்து பார்த்தால், ரோந்து வாகனத்தில் வரும் போலீசார், அவர்களுக்கு பரிசு தந்து பாராட்டுகின்றனர். அதாவது, பாதுகாப்பாக வாகனங்களை இயக்குபவர்களை போலீசார் ஊக்குவித்து வருகின்றனர். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றும் வாகன ஓட்டிகளை இந்த ரோந்து போலீசார் பரிசு வழங்கி பாராட்டி வருகின்றனர். இந்த ரோந்து படையினர், ‘ஹேப்பி பேட்ரோல்’ என்று அழைக்கப்படுகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு முதல் அபுதாபி காவல்துறையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.போக்குவரத்து போலீசார் என்றால், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து, அவர்களை மிரட்டுவது போன்றவை மட்டும் பணியல்ல.