மெல்போர்ன்: கடந்த வாரம் ஆஸ்திரேலியா நாட்டில் ஷாப்பிங் மாலில் புகுந்த ஐஎஸ் தீவிரவாதி ஒருவன், அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர். அந்த தீவிரவாதியைப் பிடிக்க போலீஸார் கடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு போக்கு காட்டிய தீவிரவாதி போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்தான். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த மைக்கேல் ரோஜர் என்பவர் சமயோசிதமாக செயல்பட்டு, அருகிலிருந்த வணிக வளாக டிராலி ஒன்றை தீவிரவாதி மீது மோதி தள்ளினார்.
டிராலி மோதியதில் நிலைகுலைந்த தீவிரவாதி போலீஸாரிடன் சிக்காமல் இருக்க தலைதெறிக்க ஓடியுள்ளான். ஆனால் அவனை போலீசாரும், ரோஜரும் சேர்ந்து துரத்திக் கொண்டு ஓடினர். பின்னர் தீவிரவாதியை சுற்றி வளைத்த போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதியை கொல்ல உதவிய மைக்கேல் ரோஜர் தனக்கென்று வீடில்லாததால் சாலையோரத்தில் வசித்து வருவது தெரிய வந்தது. இத்தகவல் அந்நாடு முழுவதும் இணையதளத்தில் மிக வேகமாக பரவியது. இதனையடுத்து அவருக்கு நிதிதிரட்ட இணையதள அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அவருக்கு ஆயிரக்கணக்கானோர் நிதியுதவி அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி