புதுடெல்லி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பூம்ரா சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார். இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடந்த 2வது போட்டி வெற்றி-தோல்வியின்றி சமனில் முடிந்தது. 2 போட்டிகள் முடிவில் இந்திய அணி 1-0 என்ற முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில், அடுத்த 3 போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில், முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமார், பூம்ரா இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர். இவர்களுக்கு முதல் 2 போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வாய்ப்பு பெற்றார். ஆனால், வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியதால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஷமி 2 போட்டியில் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியதுடன், 140 ரன்களை விட்டுத் தந்தார்.