சென்னை: திருவல்லிக்கேணி பெல்ஸ்ரோடு, பாரதிசாலை சந்திப்பு பிளாட்பாரத்தில் ஷேக் என்பவர் பிரியாணி கடை வைத்துள்ளார்.ஐஸ் ஹவுஸ், லாயிட்ஸ் ரோடு அடுத்த துலுக்கானத் தோட்டத்தைச் சேர்ந்த நவாஷ்(36) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் மத்திய சென்னை செயலாளர் முகமது தாஜூதீன் அப்பாஸ்(42), ராயப்பேட்டை, ஜவஹர் உசேன்கான் முதல் தெருவை சேர்ந்த 115வது திமுக வட்ட செயலாளர் ரஹமான் செரீப்(54) ஆகியோர் கடந்த 12ம் தேதி இரவு பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத 5 பேர் ஷேக்கை வெட்ட வந்துள்ளனர். நவாஸ், அப்பாஸ் மற்றும் செரீப் தடுக்க முயன்றபோது, ஆத்திரம் அடைந்த கும்பல், 3 பேரையும் சரமாரியாக வெட்டினர்.சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின் டாக்டர் பெசன்ஸ் சாலை தனியார் மருத்துவமனை அருகில் அப்பாஸ் நேற்றிரவு 10.30 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது 4 பைக்கில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அப்பாஸை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். ரத்தம் பீறிட அப்பாஸ் துடிதுடித்து இறந்தார். பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பித்தது. நடந்த கொடூரத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.