தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகசதீன் நேற்று 5வது கட்ட விசாரணையை தொடங்கினார். போலீஸ் தடியடியில் காயமடைந்து இறந்த டிரைவர் ஜஸ்டின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் விவரங்களை கேட்டறிந்தார். தூத்துக்குடியில் கடந்த மே 22, 23ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசாரின் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாயினர். இதுதொடர்பாக விசாரிக்க தமிழக அரசால் ஒரு நபர் விசாரணை கமிஷன் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஜூன் 4ம் தேதி தூத்துக்குடியில் விசாரணையை துவக்கினார். ஏற்கனவே 4 கட்ட விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி அருணா ஜெகதீசன் 5வது கட்ட விசாரணைக்காக நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடிக்கு வந்தார்.