ராமேஸ்வரம்: மதுரை-ராமேஸ்வரம் இடையிலான மின்சார ரயில் பாதை திட்டத்திற்காக பாம்பன் ரயில் பாலத்தில் மின்பாதை அமைப்பது குறித்து ரயில்வே போர்டு உறுப்பினர் கான்ஷியாம்சிங் நேற்று ஆய்வு செய்தார். ராமேஸ்வரம் அருகேயுள்ள பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் செல்லும்போது திறந்து வழிவிடும் ஷெர்ஜர் தூக்குப் பாலத்தை பல கோடி ரூபாய் செலவில் மாற்றியமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மதுரை - ராமேஸ்வரம் இடையிலான அகல ரயில்பாதையை மின்மயமாக்குவது குறித்து ரயில்வே அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். டெல்லியில் இருந்து ராமேஸ்வரம் வந்த ரயில்வே போர்டு உறுப்பினர் கான்ஷியாம்சிங் (இழுவை பிரிவு) பாம்பன் ரயில் பாலத்தில் மின்சார ரயில்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தார். தற்போது அகல ரயில்பாதையாக இருக்கும் பாம்பன் ரயில் பாலத்தில் மின்சார ரயில் பாதை அமைப்பதற்கு ஏற்ற வகையில் பாலத்தின் உயரம் மற்றும் அகலம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: