திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை விருதுநகர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த வாரம் இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணைக்காக பேராசிரியை நிர்மலாதேவி நேற்று முதன் முறையாக திருவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜரானார்.
வழக்கை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி முத்துசாரதா, வரும் அக்டோபர் 3ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அப்போது தனது குழந்தைகளை பார்க்க ஜாமீன் வழங்கவேண்டும் என்று நீதிபதியிடம் நிர்மலாதேவி கோரிக்கை வைத்தார். அதனை மகளிர் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரையும், மகளிர் நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 3ல் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த நிர்மலாதேவியிடம் ‘உங்களுக்கு இன்னும் அச்சுறுத்தல் இருக்கிறதா?’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ‘நீதிபதியிடம் அனைத்தையும் தெரிவித்துவிட்டேன்’ என்று அவர் பதில் கூறினார்.
விசாரணை தள்ளிவைப்பு: இதற்கிடையே நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகிேயார் ஐகோர்ட் கிளையில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், விசாரணையை செப். 28க்கு தள்ளிவைத்தார்
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி