விருதுநகர் : நிர்மலா தேவி வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக உதவி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள். இந்த வழக்கு விருதுநகர் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கைதான 3 பேர் மீதும் 1360 பக்க குற்றப்பத்திரிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதற்காக நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அக்.,3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நிர்மலாதேவி உள்பட 3 பேரும் மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்கிடையே தனது குழந்தைகளை பார்க்க ஜாமீன் வழங்க கோரி நிர்மலா தேவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி