வெயிட்டேஜ் முறை ரத்து: 82 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு...அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: கோபியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.7500 சம்பளத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அந்த பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள்  நியமிக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கப்படுவார்கள்.

தற்போது வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடந்த 2013 முதல் 2017 வரை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 82000 பேருக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன  ஆணை வழங்கப்படும்.

10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுவரை செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்டு வந்தனர். இந்த முறை இந்த ஆண்டு மட்டும் நடைமுறையில் இருக்கும். அடுத்த ஆண்டு முதல் அவர்களும்,  ஜூன் மாதமே தேர்வெழுத முடியும். அதே நேரம் 11ம் வகுப்பிற்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 12ம் வகுப்பிற்கு செல்ல முடியும். அதே போன்று மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, 12ம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை மட்டுமே உயர் கல்விக்காக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். அந்த பணிகள் முடிவுற்றவுடன், தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக கணினி ஆசிரியர் பணியிடம் ரூ.7500 சம்பளத்தில்  நிரப்பப்படும். கணினி ஆசிரியர் பணியிடமும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நிரப்பப்படுவார்கள். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: