ஊட்டி : ஊட்டியில் உள்ள மான் பூங்கா, நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊட்டி ஏரியின் மறு கரையில் மான் பூங்கா உள்ளது. இப்பூங்கா முதுமலை புலிகள் காப்பகம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பூங்காவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மான் மட்டுமின்றி, பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியவைகள் இருந்தன. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் சென்றனர்.
இந்த விலங்குகளை பராமரிக்க மற்றும் பாதுகாக்க முடியாத நிலையில் பெரும்பாலான விலங்குகள் மற்றும் பறவைகள் வண்டலூர் வன உயிரின பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு கடமான்கள் மட்டும் இருந்தன. அவைகளை வனத்துறையினர் பராமரித்து வந்தனர். இவைகளை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், திடீரென கடந்த இரு ஆண்டுகளாக இப்பூங்கா மூடப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், இப்பூங்கா தற்போது நீலகிரி வரையாடுகளின் பாதுகாப்பு மையமாகவும், பராமரிப்பு மையமாகவும் மாற்றப்படவுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வரையாடுகள் மட்டுமின்றி, வால்பாறை பகுதிகளில் விபத்துக்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் காயமடையும் வரையாடுகளை இங்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து, அவைகள் பராமரிக்கப்படவுள்ளது. அழிவின் பிடியில் உள்ள வரையாடுகளை காக்கவே இந்த பூங்கா வரையாடுகள் காப்பகமாக மாற்றப்படவுள்ளது. அதேசமயம் இங்குள்ள கடமான்களை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து இதுவரை வனத்துறை அதிகாரிகள் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. விரைவில், வரையாடுகள் காப்பகமாக மாற்றுவதை மட்டும் வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி