லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் படுதோல்வி அடைந்ததற்கு பேட்ஸ்மன்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறித்து பெருமை கொள்ள முடியவில்லை. முக்கியமாக அங்கு வானிலை கணிக்க முடியாத அளவுக்கு மாறிக்கொண்டே இருந்ததால் வியூகம் வகுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இங்கிலாந்து வீரர்கள் விட்டுக் கொடுக்காமல் முழு திறனை வெளிப்படுத்தி விளையாடியதால் வெற்றி அவர்களுக்கே உரித்தானது. முதுகு வலி காரணமாக தன்னால் சரியாக விளையாட முடியவில்லை. அடுத்த டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 5 நாட்கள் இருப்பதால் அதற்குள் உடல்நிலை சீராகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.