தேவாரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு பீன்ஸ் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு மூட்டை 3,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.தென்மாவட்டங்களுள் தேனி மாவட்டம் பசுமையான வயல்வெளிகளை கொண்டது. இம்மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில், சுமார் 14 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் இருபோக சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், தேவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான தம்மிநாயக்கன்பட்டி, லட்சுமிநாயக்கன்பட்டி, டி.மீனாட்சிபுரம், அழகர்நாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களை சுற்றிலும் பீன்ஸ் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு விளையக்கூடிய பீன்ஸ் தினந்தோறும் தேவாரம் மார்க்கெட்டிற்கு வந்து பின்பு கம்பம், தேனி, சின்னமனூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இங்கிருந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்புவது வழக்கம்.