பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே உள்ள குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் கடந்த மாதம் 27ம் தேதி ஆடி மாத திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையடுத்து, கடந்த 10 நாட்களாக எல்லைக்காட்டு அம்மன் சாமுண்டீஸ்வரி, துர்காதேவி, மகாலட்சுமி, கருமாரி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். 7ம் நாளன்று மாலையில் 1008 பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, எல்லையம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
10ம் நாள் திருவிழாவான நேற்று மாலை கோயில் வளாகத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் காப்பு கட்டிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து உற்சவர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பூந்தமல்லி பகுதியில் நேற்றிரவு வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் பூவை.ஞானம், நிர்மலா ஞானம் தலைமையில் உபயதாரர்கள், மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!