டெல்லி: பழமையான நினைவுச் சின்னங்களில் புகைப்படங்கள் எடுக்கக் கூடாதென்ற தொல்லியல் துறையின் தடை, பிரதமரின் தலையீட்டால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேசிய முக்கியத்துவம் மற்றும் தொல்லியல் சார்ந்த மூவாயிரத்து 686 பழமையான நினைவுச்சின்னங்களை, பராமரித்து வரும் தொல்லியல் துறை, அங்கு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க பொதுமக்களுக்கு தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்குமாறு புகைப்பட கலைஞர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கோரி வந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று தொல்லியல் துறையின் புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பண்டைய நினைவுச்சின்னங்களை செயற்கைக்கோள்கள் மூலம் படம்பிடிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார். அப்படி இருக்கும்போது பொதுமக்கள் புகைப்படம் எடுக்க தடை விதித்திருப்பது சரியல்ல என மோடி கூறினார். இதையடுத்து, தாஜ்மஹால், அஜந்தா குகை, லே அரண்மனை ஆகிய இடங்களைத் தவிர பிற இடங்களில் புகைப்படம் எடுப்பதற்கான தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!