வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் நேற்று சூறைக்காற்று வீசியது. மேலும் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது.
இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடற்கரையில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். 2வது நாளாக இன்றும் காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் ஓய்வில் உள்ளனர். இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக புழுதிக்காற்று வீசி வருகிறது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கண்களில் தூசி விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.