புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகம் கடந்த மே மாதம் முதல் ஜூன் 7ம் தேதி வரை இளநிலை பாடப்பிரிவில் சேர்வதற்கான அட்மிஷன் போர்டலை திறந்து வைத்திருந்தது. இதில் சேர 2,78,544 பேர் விண்ணப்பித்திருந்தனர். மெரிட் சார்ந்த பாடப்பிரிவுகளில் சேர கடந்த 19ம் தேதி பல்கலை தனது முதல் கட்ஆப் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து பல்கலை தளம் மூலம் குறிப்பிட்ட கல்லூரியில் விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்து அட்மிஷன் சிலிப்புடன் சேர்க்கை பெற வேண்டும் என நிர்வாகம் தெரிவித்தது.இதனால் மாணவர்கள் முண்டியடித்து கொண்டு அட்மிஷன் பெற முற்பட்டனர். ஆனால் ஒரே நேரத்தில் பலர் விண்ணப்பிக்க முற்பட்டதால் பல்கலை தளம் முடங்கியது. அதிர்ச்சியடைந்த மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு சென்று அங்குள்ள பேராசிரியர்களின் உதவியை நாடினர். மேலும் மாணவர்களின் சான்றிதழ்கள் பாதுகாக்கப்படும் அரசு சொந்தமான டிஜி லாக்கரும் பல்கலை தளத்துடன் இணைக்கப்படாததால் சிக்கல் ஏற்பட்டது. எனினும் சிறிது நேர தாமதத்துக்கு பின் தளம் பழையபடி இயங்கியதாகவும், நேற்று மட்டும் 1,070 பேர் விண்ணபித்ததாகவும் பல்கலை நிர்வாகம் தெரிவித்தது. டிஜி லாக்கர் பிரச்னையை அடுத்து, மாணவர்கள் சான்றிதழை சமர்பிக்க மேலும் 10 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.