திருவனந்தபுரம்: கேரளாவில் 10க்கும் மேற்பட்ட வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் விவசாய கடன் வாங்கி மோசடி செய்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.கேரளாவின் குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் (66). பாதிரியார். அந்த பகுதியில் ‘குட்டநாடு மேம்பாட்டு கழகம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். அதன் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இந்த அமைப்பில் அந்த பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களுக்கு வங்கியில் இருந்து விவசாய கடன் வாங்கி தருவதாக தாமஸ் கூறியதாக தெரிகிறது.அதன்படி சிலருக்கு வங்கிகளில் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஏராளமானோரின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து ஆலப்புழா சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட வங்கிகளில் கோடிக்கணக்கில் விவசாயக் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலப்புழா குற்றப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமாரன் விசாரணை நடத்தினார்.