கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.195 கோடி பணமும், 400 ஆடம்பர கைபைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கடந்த 10ம் தேதி வரை மலேசியாவின் பிரதமராக இருந்தவர் நஜீப் ரசாக். இவர் தனது ஆட்சி காலத்தில் அரசு பணத்தை சுரண்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை நஜீப் ரசாக் மறுத்து வந்தார். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பிரதமர் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த அதிருப்தி சமீபத்தில் நடந்த தேர்தலிலும் எதிரொலித்தது. நஜீப் ரசாக் தலைமையிலான பாரிசன் நேஷனல் கூட்டணி தோல்வி அடைந்தது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வாரம் நஜீப்பின் வீடு உட்பட அவருக்கு சொந்தமான 12 இடங்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அதில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் 5 லாரிகளில் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டன.