சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் ஆகிய 3 வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. பயிற்சியாளர் லீமேன் தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடருடன் பதவி விலகினார். அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான பணியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மும்முரமாக ஈடுபட்டது. இந்நிலையில், புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குநர் சதர்லாண்ட் நேற்று அறிவித்தார். முன்னாள் துவக்க பேட்ஸ்மேனான லாங்கர் சுமார் 20 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியவர். 105 டெஸ்டில் 7,500க்கும் அதிகமான ரன் மற்றும் 23 சதம் அடித்துள்ளார்.