பீஜிங்: “அடிப்படை மனித உரிமைகளின் எதிரி தீவிரவாதம்” என சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் பேசிய அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார். சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசீப் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். இந்த கூட்டம் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். மறைமுகமாக பாகிஸ்தானை தாக்கும் வகையில் அவர், சர்வதேச தீவிரவாதம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் கொள்கைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
உலகத்தால் இன்று பல்வேறு சவால்கள் எதிர்கொள்ளப்பட்டு வருகின்றது. இவற்றில் சர்வதேச தீவிரவாத அச்சுறுத்தல் என்பது முதலிடத்தில் உள்ளது. இதற்கு எதிராக வலிமையான கட்டமைப்பை உடனடியாக உருவாக்குவது அவசியமாகும். தீவிரவாதம் என்பது அடிப்படை மனித உரிமைகளான வாழ்க்கை, அமைதி, செழிப்பு ஆகியவற்றுக்கும் எதிரியாக உள்ளது.