சென்னை: இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ரங்கசாமி எழுதி, இயக்கியுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்துக்கு ராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜுபன் இசையமைக்கிறார். படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது. ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் சார்பில் மை இந்தியா வி.எஸ்.மாணிக்கம் இந்த படத்தை தயாரிக்கிறார். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் படக்குழுவினர் கேக் வெட்டி தயாரிப்பாளரின் பிறந்த நாளை கொண்டாடினர். படம் குறித்து ஜெயப்பிரகாஷ் ரங்கசாமி கூறும்போது, ‘‘இன்றைய காலத்துக்கேற்ற அருமையான காதல் கதையை மையமாக வைத்து காமெடியும் கலந்த படமாக உருவாக்க உள்ளோம். மிக விரைவில் சென்னை சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ளோம். இன்று பிறந்தநாள் காணும் எங்கள் தயாரிப்பாளர், இந்த படத்துக்கு தூணாக இருக்கிறார். அவரது துணையுடன் படம் சிறப்பாக வரும் என நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
