சென்னையில் உணவு விநியோகம் செய்யும் சேத்தன் சீனுவும், ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு உதவி செய்யும் ஆஷ்னா சவேரியும் காதலர்கள். இந்நிலையில் அரசியல்வாதி, போலீஸ் இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர் ஆகியோர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்படுகின்றனர். அவர்களின் உடலில் எழுதப்பட்ட எழுத்துகளை வைத்து, அது திருக்குறள் என்று கண்டறியும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் குமார், சேத்தன் சீனு மீது சந்தேகப்படுகிறார். நிஜ கொலையாளி யார்? ஆஷ்னா சவேரியின் காதல் நிறைவேறியதா என்பது மீதி கதை.
வடசென்னை இளைஞராக நடிப்பிலும், ஆக்ஷனிலும் சேத்தன் சீனு அசத்தியுள்ளார். ஆஷ்னா சவேரியின் திடீர் அவதாரம் எதிர்பாராதது. முக்கிய கேரக்டர்களில் பிரேம் குமார், சாய் தீனா, தீபா சங்கர், மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா, ராஜசிம்மன், ராம்ஸ், மனோபாலா ஆகியோர் கச்சிதமாக நடித்துள்ளனர்.
சுரேஷ் பாலா இயல்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை பரவாயில்லை. சான் லோகேஷ் எடிட்டிங் ஓ.கே. பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்களுக்கு சட்டத்தை மீறிய தண்டனை வழங்க வேண்டும் என்பதை அழுத்தமாக எழுதி இயக்கியுள்ள சங்கர் சாரதி, சில நாடகத்தனமான காட்சிகளை கவனித்து மாற்றியிருக்கலாம்.
