வரும் 2040ல் கதை நடக்கிறது. காதலர்களுக்கு இடையிலுள்ள காதல் நிஜமா, பொய்யா என்பதை கண்டுபிடிக்கும் கேமரா பொருந்திய மோதிரம் போன்ற செயலியை எஸ்.ஜே.சூர்யா வடிவமைத்து, அனைத்து காதலர்களையும் அதற்கு அடிமையாக்க முயற்சிக்கிறார். மனிதன் வடிவமைத்த செயலியை விட, அவனது இதயம் சொல்வதுதான் உண்மை என்று நிரூபிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் சவால் விடும் பிரதீப் ரங்கநாதன் அதில் ஜெயித்தாரா? காதலி கிரித்தி ஷெட்டியுடன் இணைந்தாரா என்பது கிளைமாக்ஸ். 2040ல் எல்ஐகே நிறுவனராக வரும் எஸ்.ஜே.சூர்யா, வழக்கமான பாணியில் நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். அவருக்கும், சீமானுக்குமான ஆங்கிலம் மற்றும் தமிழ் உரையாடல் மோதல் சூப்பர்.
செல்போனையே விரும்பாத சீமானின் மகனாக வரும் பிரதீப் ரங்கநாதன், லவ் பிரேக்அப் மூலம் மனமுடைவதும், பிறகு செயலிக்கு எதிராக போராடுவதும், கிரித்தி ஷெட்டியின் காதலுக்கு ஏங்குவதும் சிறந்த நடிப்பு. கிரித்தி ஷெட்டி, காதல் தோல்வியில் அழுவது உருக்கம். அவரது அம்மாவாக, ‘வாளமீனு’ மாளவிகா ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சீமான், ஆனந்தராஜ், யோகி பாபு, விடிவி கணேஷ், கவுரி கிஷன், சாரா ஆகியோரும் சிறப்பாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளனர். விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ளார். இதே கதை ஒரு படத்தில் வந்திருக்கிறது. திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அனிருத் இசையில் பாடல்கள் சூப்பர். ரவிவர்மன் ஒளிப்பதிவும், பிரதீப் ராகவன் எடிட்டிங்கும் குறிப்பிடத்தக்கது. பிற்பகுதியிலுள்ள விறுவிறுப்பு முற்பகுதியில் இல்லை.
