ஆபாச கருத்துகளால் மன உளைச்சல்: போலீசில் ஈஷா ரெப்பா புகார்

ஐதராபாத்: அசோக் செல்வன் ஜோடியாக நித்தம் ஒரு வானம் படத்தில் நடித்தவர் ஈஷா ரெப்பா. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தன்னைப் பற்றி ஆபாச கருத்துகள் சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருவதாக ஈஷா ரெப்பா, ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், ‘என்னுடைய புதிய படங்கள் சம்பந்தமான விழாக்களில், நான் கலந்துகொண்ட போது வெளியான புகைப்படங்கள் மற்றும் நான் பேசிய கருத்துக்களை, சிலர் அவதூறாகத் திரித்து கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

என்னை பற்றி ஆபாச கருத்துக்களையும் பதிவிட்டு வருவதால், நான் கடும் மன உளைச்சலில் இருந்து வருகிறேன். எனது குடும்பத்தாரையும் இந்த விஷயம் பாதித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈஷா ரெப்பா போலீசில் புகார் அளித்திருக்கும் சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: