சென்னை : பணத்துக்காகவே சினிமாவில் நடிக்க வந்தேன் என்று நடிகை பிரியா பவானி சங்கர் கூறினார். சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓமணப் பெண்ணே, ஹாஸ்டல் தொடர்ந்து இவரது படங்கள் வெளியாகி வந்தது.கடந்தாண்டு அருண் விஜய்க்கு ஜோடியாக யானை, அதர்வா உடன் குருதி ஆட்டம், தனுஷின் திருச்சிற்றம்பலம் என இவர் நடித்த மூன்று படங்கள் வெளியாகின. இதில், திருச்சிற்றம்பலம் மெகா ஹிட்டாகி, நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது அகிலன், ருத்ரன், பொம்மை, பத்து தல, இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் தமிழில் தனுஷுடன் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். தமிழில் நடிக்க வந்தபோது எனக்கு எதிர்காலத்தைப் பற்றிய பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால் திருச்சிற்றம்பலம் பட வெற்றி எனது வாழ்க்கையை மாற்றியுள்ளது.
சினிமாவிற்கு வரும்போது ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்றும் கவலைப்படவில்லை, நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அதற்காகவே நடித்தேன். இவ்வாறு பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.