×

நடிக்க மாட்டேன்னு நான் சொல்லவில்லை - நஸ்ரியா திடீர் பல்டி

நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்ஹா படங்களில் நடித்த நஸ்ரியா தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். திடீரென்று மலையாள நடிகர் பஹத் பாசிலை மணந்துகொண்டு செட்டிலானார். அதன்பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தினார். கணவருக்கு படப்பிடிப்பில் சாப்பாடு எடுத்துச்சென்று பரிமாறுவது, குடும்ப வேலைகளை கவனிப்பது என்று முழுநேர இல்லத்தரசியாக மாறினார். அடுத்த 4 வருடத்தில் புதியபடம் எதிலும் நடிக்கவில்லை.

வந்த வாய்ப்புகளையும் ஏற்க மறுத்தார். இனி நஸ்ரியா நடிக்க வரமாட்டார், நடிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டார் என்று திரையுலகினர் எண்ணினர். ஆனால் கடந்த 2018ம் ஆண்டு பெண் இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கிய ‘கூடே’ படத்தில்  ரீஎன்ட்ரி தந்தார். வேறு சில இயக்குனர்களும் நஸ்ரியாவிடம் கால்ஷீட் கேட்டு சென்றபோது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதுபோல் நடிக்க மறுத்து முரண்டு பிடித்தார்.

நஸ்ரியா, அஜீத்குமாரின் தீவிர ரசிகை. இந்நிலையில் வலிமை படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நஸ்ரியா நடிப்பதாக தகவல் பரவியது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நஸ்ரியா, ‘வலிமை படத்தில் நடிக்க கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. அஜீத்தின் ரசிகை என்ற முறையில் அப்படம் பற்றிய தகவலை பகிர்ந்து வருகிறேன்’ என்றார். இந்நிலையில் திடீரென்று தனது முடிவை மாற்றிக்கொண்டு டிரான்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் அவரது கணவர் பஹத் பாசிலுடன் இணைந்து நடிக்கிறார்.

அன்வர் ரஷீத் இயக்குகிறார். மீண்டும் நடிக்க வந்தது குறித்து நஸ்ரியாவிடம் கேட்டபோது,’கல்யாணத்துக்கு பிறகு ஒரேயொரு படத்தில்தான் நடித்தேன். தற்போது பஹத் பாசிலுடன் இணைந்து டிரான்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். நடிப்பதை நிறுத்தியது ஏன் என்று கேட்கிறார்கள். நடிப்பதை நிறுத்திவிட்டதாக யாரிடமும் நான் சொல்லவில்லை. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை. கதையும் கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன்’ என்றார்.

Tags : Nazriya ,
× RELATED சூர்யா படத்தில் துல்கர், நஸ்ரியா