லாஸ்ஏஞ்சல்ஸ்: ‘அவதார்’ படத்தின் 3வது பாகம், ஆறு இந்திய மொழிகளில் இன்று வெளியாகிறது. அதனால் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இயக்குனர் ராஜமௌலியுடன் ஜேம்ஸ் கேமரூன் உரையாடிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இணையம் வாயிலாக பேசிய ஜேம்ஸ் கேமரூன் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது ஜேம்ஸ் கேமரூன் ராஜமௌலியை பார்த்து, “நான் உங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வர ஆசைப்படுகிறேன். அங்கு நீங்கள் செய்யும் மேஜிக்கை பார்க்க வேண்டும்” என்றார். அதற்கு ராஜமௌலி “அது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் சார். எங்கள் படக்குழுவிற்கு மட்டுமல்ல மொத்த திரையுலகமிற்குமே மகிழ்ச்சி தான்.
உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” என்றார். பின்பு பேசிய ஜேம்ஸ் கேமரூன், “அதை நான் விரும்பி செய்கிறேன். நீங்கள் தற்போது புதிதாக ‘வாரணாசி’ என்ற படத்தை இயக்கி வருகிறீர்கள் அல்லவா” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ராஜமௌலி, “ஆமாம் சார். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் ஏழு எட்டு மாதங்கள் படபிடிப்பு இருக்கிறது” என்றார். பின்பு பேசிய ஜேம்ஸ் கேமரூன், “புலியை வைத்து எதாவது ஜாலியாக படம் எடுத்தால் சொல்லுங்கள்” என சிரித்தார். மேலும் ராஜமௌலியின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு கேமாரவை எடுத்துக்கொண்டு செகண்ட் யுனிட் டைரக்டர் போல சில ஷாட்டுகளை எடுப்பேன் என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
