×

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தல்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை ஜூன் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு  ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், தனி அதிகாரி சேகர்  பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் பணிமாறுதல் ஆனதால் அந்த பதவிக்கு புதிய தனி அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. இவர் ஒரு வருட காலமாக  நீடிப்பார் என்று தமிழக அரசு  அரசாணை பிறப்பித்தது.

இந்த வழக்கு மீண்டும் கடந்த வாரம்  விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், தனி அதிகாரி பதவி காலம் மார்ச் மாதம் முடிவடைவதால் மேலும் ஒரு வருடத்திற்கு புதிய தனி அதிகாரியை நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில்  தெரிவித்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த விஷால் தரப்பு வக்கீல், தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு நியமித்த தனி அதிகாரியின் பதவிக் காலம் மார்ச் மாதம்  முடிவடைவதால் தயாரிப்பாளர் சங்க தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும்.  தற்போது தனி அதிகாரியை தமிழக அரசு மேலும் ஒரு வருடத்திற்கு நியமித்திருப்பது சட்டத்திற்கு விரோதமானது என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர் சங்க தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஜூன் 30ம் தேதிக்குள் தமிழக அரசு நடத்த வேண்டும். தேர்தல் நடத்தியது தொடர்பான அறிக்கையை ஜூலை 31ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Supreme Court ,government ,election ,Tamil Nadu ,
× RELATED தேர்தல் ஆணையர்கள் நியமனச்...