அமாவாசையை பௌர்ணமியாக்கிய அபிராமிபட்டர்

தை அமாவாசை: 21-1-2023

சரபோஜி மன்னர் ஆட்சிக்காலத்தில் பக்தன் ஒருவருக்காக அபிராமி அம்பாள் ‘தை அமாவாசையை முழுப் பௌர்ணமியாக்கி ‘அபிராமி அந்தாதி’ அருள் செய்த தலமும் இந்தத் தலமே. அபிராமி அம்பிகையின் பக்தரான அபிராமிபட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பௌர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், அந்த நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார்.

பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79-ஆம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது. அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர்.

79-ஆம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை பௌர்ணமிநிலவைப் போல எரியச் செய்கிறார்கள். இந்த வைபவத்தை இன்றும் தை அமாவாசையன்று ஐதீக பக்தித் திருவிழாவாக நிகழ்த்திக் காட்டுகின்றார்கள். இதைக்  காணஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர். இந்தத் தலத்தில் காலசம்ஹார மூர்த்தி, இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன், ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர்.

சாதாரணமாக காலசம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும்போது, எமனை பார்க்கமுடியாது. பூஜை செய்யும்போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை `சம்ஹார கோலம்’ என்றும், எமனுடன் இருப்பதை `உயிர்ப்பித்த கோலம்’ என்றும் சொல்கிறார்கள். ஆக, ஒரே சமயத்தில் `சம்ஹார’ மற்றும் `அனுக்கிர மூர்த்தியை’ தரிசிக்கலாம். இந்த சந்நதியிலுள்ள பாலாம்பிகை பால சிறுமி வடிவில், இரு கரங்களுடன் காட்சி தருகிறாள்.

அருகில் லட்சுமி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர். சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல, இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதனை, `திருக்கடையூர் ரகசியம்’ என்கிறார்கள். திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் 100வயது பூர்த்தி, கனகாபிஷேகம் 90 வயது, சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும்.

தொகுப்பு: பரிமளா

Related Stories: