அறிவுடையோர் யார்?

இறைத்தூதர் யூசுப் நபியின் அழகிய வரலாற்றைத் திருக்குர் ஆனின் 12-ஆம் அத்தியாயம் விரிவாக எடுத்துரைக்கிறது.  இந்த அழகிய வரலாற்றை முழுமையாக விவரித்த பிறகு, அத்தியாயத்தின் இறுதியில் இறைவன், ‘‘முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் அறிவுடையார்களுக்கு (உலில் அல்பாப்) அரிய படிப்பினை உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளான்.

இறைவன் குறிப்பிடும் அந்த ‘அறிவுடையோர்கள்’ யார் யார்? அவர்களின் தன்மை என்ன? பண்பு நலன்கள் எப்படி இருக்கும்? அவர்களுக்கான வரைவிலக்கணம் என்ன? இதற்கு விடை அடுத்த 13-ஆம் அத்தியாயத்தில் (அர்ரஅத்) உள்ளது. அறிவுடையோர்கள் (உலில்அல்பாப்) எத்தகையவர்கள் எனில்…

1. இறைவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.

2. உறுதிப்படுத்திய பிறகு அந்த உடன்படிக்கைகளை முறிக்கமாட்டார்கள்.

3. எந்தெந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கும்படி இறைவன் கட்டளையிட்டுள்ளானோ அந்தந்த உறவு முறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள்.

4. தம் இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்வார்கள்.

5. மறுமையில், கடுமையான முறையில் தம்மிடம் கணக்கு கேட்கப்படுமோ என்று அஞ்சிக் கொண்டிருப்பார்கள்.

6. இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்.

7. தொழுகையை நிலை நாட்டுகிறார்கள்.

8. அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவுசெய்கிறார்கள்.

9. தீமையை நன்மையைக்கொண்டு களைகிறார்கள்.

10. மறுமையின் நல்ல முடிவு இவர்களுக்கே உரித்தானது. (குர்ஆன் 13:20-22)

இவைதாம் அறிவுடையோர்களின் பண்பு நலன்கள். இந்தப் பண்பு நலன்கள் நம்மிடம் இருக்கின்றனவா? இருந்தால் நாமும் அறிவுடையோர்கள்தாம்.

- சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

‘‘இவர்களுக்கு (இத்தகைய அறிவுடையோர்களுக்கு) நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் நுழைவார்கள்.’’ (குர்ஆன் 13:23)

Related Stories: