பசுக்களைப் போற்றிய நாயன்மார்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறான பெரியபுராணத்தில், மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை பசுவோடு தொடர்புடையதாக விளங்குகின்றன. இவர்கள் முறையே ஆனாய நாயனார், சண்டேசுவரர், திருமூலர் என்பவராவர்.இதில், ஆனாய நாயனார் வழிவழியாக ஆன் (பசு) குலத்தை மேய்க்கும் தொழிலையுடையவர் இவர். பசுக்குலத்தை மகிழ்விக்கும் விருப்பமுடன் குழல் ஊதுபவர் இறுதியில் கொன்றை மலர்கள் மலர்ந்திருப்பதைக் கண்டு அவற்றையே சிவபெருமானாக எண்ணி இசை மழை பொழிந்து சிவனருள் பெற்றுக் கயிலை சேர்ந்தார்.

சண்டேசுவரநாயனார் மறைக்குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும், பசுக்கள் சிவபெருமானுக்கு ஆனைந்து கொடுப்பன, தெய்வீக தன்மை உடையவை என்ற கருத்தில் தானே விரும்பி பசுக்களை மேய்க்கும் தொழிலை ஏற்றுக்கொண்டார். பின்னர், அவர் காட்டிய அன்பால் கவரப்பட்ட பசுக்கள், அவரைத் தங்கள் கன்றாகவே எண்ணி பாலைப் பொழிய, அவற்றைக் கொண்டு அவர் மணலால் லிங்கம் அமைத்து வழிபாடு செய்து சண்டீசபதம் பெற்றார்.

மூன்றாவதான திருமூலர், பசுக்களோடு எவ்வித தொடர்புமில்லாதவர். அவர் செல்லும் வழியில் ஒரு மேய்ப்பவன் இறந்ததால், வருந்தும் பசுக்களின் துயரை நீக்கக் கூடு விட்டு கூடுபாய வேண்டியதாயிற்று. பின்னர், பசுமேய்ப்பவனான அந்த மூலன் என்பவனின் உடலிலேயே தங்கிச் சிவாகமத்தைத் தமிழில் திருமந்திர மாலையாக அருள் வேண்டியதாயிற்று.

இறைவனின் பாதோதகமான அபிக்ஷேக நீரைப் பெறும் வாயிலைக் கோமுகம் என்கிறோம். அந்த வகையில், கோமுகமாக அதாவது பசுக்களின் காரணமாகவே திருமந்திரம் பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த மந்திர மாலையே பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக அமைந்துள்ளது.

திருமூலர் வரலாற்றினைப் பாடிய சேக்கிழார் பெருமான், அவருடைய புராணத்தில் இரண்டு பசுபதீச்சரங்களைக் குறிக்கின்றார். மன்னு புகழப் ‘‘பசுபதி நேப்பாளம் பணிந்தேத்தி’’ என்று வடநாட்டு பசுபதி நாதரையும் ‘‘ஆவடு தண்டுறை அணைந்து பெரும் பசுபதியார்’’ என்று திருவாவடுதுறையையும் கோமுத்தீஸ்வரையும் குறிப்பிடுகின்றார். இப்படி இரண்டு பசுபதி நாதர்களையும் வணங்கி அருள் பெற்ற திருமூலரைத் தொடர்ந்து காணலாம்.

தொகுப்பு: அருள்ஜோதி

Related Stories: