சனிபகவான் பார்வையால் துன்பப்படுகிறவர்களுக்கு ஆஞ்சநேயர் வழிபாடு அருமருந்து. சஞ்சீவி மூலிகைத் தேடிப்போன அனுமனைப் பிடிக்க சனிபகவான் பின் தொடர்ந்ததாகவும் அனுமன் அவர் பார்வையிலிருந்து தப்பித்துக்கொண்டதோடு சனிபகவான் எதிர்பாராதபோது அவரைத் தாக்கித் தன் பலத்தால் வீழ்த்தினாராம். அப்போது, தன்னை விடுவிக்குமாறு வேண்டிக்கொண்ட சனிபகவானிடம் 'ராம பக்தர்களூக்கு ஒரு நாளூம் துன்பம் தரக்கூடாது' என்னும் வரம் வாங்கிக்கொண்டு விடுவித்தாராம் ஆஞ்சநேயர்.
எனவே, ஆஞ்சநேயர் பக்தர்களை, ராம நாமம் சொல்பவர்களை சனிதோஷம் பாதிக்காது என்பது நம்பிக்கை. இதற்கு சாட்சியாக ஆம்பூர் அருகே கோயில்கொண்டிருக்கும் 'வீர ஆஞ்சநேயர்' பிரமாண்டத் திருமேனியராக தன் காலடியில் சனிபகவானை அடக்கி வைத்திருக்கும் திருக்கோலத்தில் காட்சி அருள்கிறார். எனவே சனிதோஷம், ஏழரைச் சனி, அஷ்டம சனி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் ஆஞ்சநேயரை வணங்கி வழிபடுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
குறிப்பாக அனுமன் ஜயந்தி நாளில் அவரை தரிசனம் செய்து வழிபட்டால் சனி தோஷம் விலகி நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மனோகாரகனாகிய சந்திரன் வலிமை இல்லாமல் இருக்கும் ஜாதகக் காரர்களுக்கு மனவலிமை குறைவாக இருக்கும். முடிவுகள் எடுக்க முடியாமல் திண்டாடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து அனுமனை தியானிப்பதன் மூலம் தைரியமும் நம்பிக்கையும் பெறலாம். ஆரோக்கியக் குறைபாடு உள்ளவர்கள் சஞ்சீவி ஆஞ்சநேயர் சந்நிதி இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் ஆரோக்கியத்தில் மேம்பாடு அடையலாம்.