முருகப் பெருமான் அவதரிப்பதற்கு முன்னரே தோன்றிய யுகாந்தரப் பழைமை வாய்ந்த திருத்தலம்.
மன்மதன், ஈசனின் நெற்றிக் கண்ணால் சாம்பலாக்கப்படுவதற்கு முன், ஈசனை பூஜித்ததால் இத்தல ஈசன், காமநாதீஸ்வரர் என வணங்கப்படுகிறார்.
சேலத்தைச் சுற்றியுள்ள பஞ்சபூதத்தலங்களில் ஆறகழூர் வாயு தலமாகும். ஒரே கோயிலில் அஷ்டபைரவர்கள் அருள்வது, வேறெங்கும் காணவியலாத அபூர்வம்.
பைரவர் என்றால், பயத்தைப் போக்குபவர், பயத்தைத் தருபவர் என்று இரு பொருள் உண்டு. தன்னை வணங்கும் பக்தர்களின் பயத்தைப் போக்கியும், அவர்களின் எதிரிகளுக்கு பயத்தைத் தருவதும் பைரவரின் அருள்.இத்தல அஷ்டபுஜ காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று, உலக நன்மைக்காக பைரவ யாகம் நடைபெறுகிறது. இவரே அஷ்ட ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதி என்கிறது வாருணபத்ததி எனும் நூல்.ஒன்பது அமாவாசை தினங்களில் 27 மிளகுகள் கட்டிய துணியைத் திரியாக்கி, இவர் சந்நதியில் விளக்கேற்றி, தயிர் சாதம் நிவேதித்து வழிபட, இழந்த சொத்துகள் திரும்பக் கிடைப்பதாக ஐதீகம்.அஸிதாங்க பைரவர் தன் ஆறு கரங்களில் கதை, கபாலம், பானபாத்திரம், கட்கம், கமண்டலம், ஜபமாலை ஏந்தி திகம்பரராக காட்சியளிக்கிறார். இவரது சக்தியே, பிராம்மி. குரு பைரவர், சூரியபகவானின் அருகில் எழுந்தருளியுள்ளார். டமருகம், மான், கத்தி, கபாலம் ஆகியவை ஏந்தி அருளும் இவரது சக்தியே மாஹேஸ்வரி.சண்டபைரவர், சந்திரனுக்கருகே அருள்கிறார். அமாவாசையன்று சிறப்பு வழிபாடுகள் பெறுகிறார். வில், அம்பு, கத்தி, கபாலம் ஏந்தி காட்சி தரும், இவரது சக்தியே கௌமாரி. குரோதனபைரவர், ஈசன் சந்நதி முன் சங்கு, சக்கரம், கபாலம், கதை ஏந்தி அருள்கிறார். இவரின் சக்தி, வைஷ்ணவி.பிராகாரத்தில் உன்மத்த பைரவர், ஞானத் திருமுகத்துடன் உலக்கை, கபாலம், கேடயம், அபய ஹஸ்தம் காட்டி அருள்கிறார். இவரது சக்தி, வாராகி.ராஜகோபுரத்தின் பக்கவாட்டில் கபால பைரவர் வீற்றருள்கிறார். இவரது சக்தி ஐந்த்ரீ.பீஷண பைரவர் நான்கு கால் மண்டபத்தில் பலிபீட வடிவில் காட்சியளிக்கிறார். முதலில் இவரை குனிந்து வணங்கிய பின்பே ராஜகோபுர கபால பைரவரை தரிசிக்கிறார்கள். இவரது சக்தி, சாமுண்டா.பிராகாரத்தில் வாராஹி, ஜேஷ்டாதேவி, ரௌத்ரி ஆகிய மூவரும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றனர்.இரண்டு அடி உயரத்தில் உமையன்னையை அணைத்தவாறு நந்தியின் மேல் திரிபங்க நிலையில் அருள்புரியும் ஈசன், பிரதோஷ நாயகராக வர்ணிக்கப்படுகிறார்.அம்பிகை, பெரியநாயகி. பெயருக்கேற்றாற்போல் பெரிய வடிவில் அருள்புரிகிறாள்.தேவியின் முன் சிம்மத்துக்கு பதிலாக நந்தி இருக்கிறது. அதேபோல, சந்நதி பிராகாரத்தில் சண்டிகேஸ்வரி அருள்கிறாள். காசியைப் போலவே பைரவர், அன்னபூரணி, விஸ்வநாதர், விசாலாட்சி, வாராஹி ஆகிய ஐவரும் இங்கே அருள்புரிகிறார்கள். எனவே இத்தல தரிசனம் காசி தரிசனத்திற்குச் நிகரானது.கள்ளக்குறிச்சி-ஆத்தூர் சாலையில், சேலம் போகும் வழியில் சின்னசேலம் கூட்டு ரோடிலிருந்து 2 கி.மீ தொலைவில் ஆலயம் உள்ளது.- ஜெயலட்சுமி