போற்றுவோம் ஏகனின் திருப்புகழை!

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் ‘அல்ஃபாத்திஹா’ எனும் தோற்றுவாய் அத்தியாயம். படைத்த இறைவன் தன் வேதத்திற்கு வழங்கிய ‘பாயிரம்’ என்றும் இதைச் சொல்லலாம். இந்த அத்தியாயத்தின் சிறப்புகள் சொல்லில் அடங்காதவை. மொத்தமே ஏழு வசனங்கள்தாம். ஆனால், பொருளும் பயனும் ஏழு சமுத்திரங்களைவிட அதிகம்.இந்த அத்தியாயத்தின் பெருமையை ஒரே வரியில் சொல்வதானால் - “உம்முல் கிதாப்” - ‘‘வேதங்களின் தாய்’’ என்றே இது சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொழுகையிலும் ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதுவது கட்டாயமாகும். “குர்ஆனின் சிறுபகுதியைக்கூட மனனம் செய்யாமல் எந்த இதயம் இருக்கிறதோ அந்த இதயம் இருள்சூழ்ந்த பாழடைந்த வீட்டிற்கு ஒப்பாகும்” என்று நபிகளார்(ஸல்) கூறியிருக்கிறார். முஸ்லிம் வீடுகளில் குழந்தைப் பருவத்திலேயே இந்த ஃபாத்திஹா அத்தியாயத்தைப்  பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவார்கள்.இந்த அத்தியாயம் குறித்து மூன்று செய்திகள் நம் கவனத்தில் இருக்க வேண்டும்.

1. மாலிக்கி யவ்மித் தீன் - இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி.இது நம் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டால் இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியான இறைவனிடம் நல்ல தீர்ப்பைப் பெறும் வகையில் இந்த உலக வாழ்வை அமைத்துக் கொள்ளும் உணர்வு தோன்றி விடும்.

2. இய்யாக நஅபுது - வ இய்யாக நஸ்தயீன் - “உன்னையே வழிபடுகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்.”

நன்றாகக் கவனியுங்கள்.

‘உன்னையும் வழிபடுகிறோம்... உன்னிடமும் உதவி தேடுகிறோம்’ என்று இல்லை.

“உன்னையே - உன்னை மட்டுமே வழிபடுகிறோம். உன்னிடமே - உன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம்.”

‘‘இதர படைப்பினங்கள் யாரையும் வழிபட மாட்டோம்... யாரிடமும் உதவி தேட மாட்டோம்’’ எனும் பொருள் வந்துவிடுகிறதல்லவா? இணைவைப்பின் கதவை இறுகச் சாத்திவிட்ட உறுதியான

வசனம் இது.

3. எஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம் - “இறைவா, எங்களுக்கு நேரான வழியைக் காட்டு.”

இது அடியார்களின் வேண்டுதல் - இறைஞ்சுதல்.

இந்த வேண்டுதலுக்குப் பதிலாக - இறைஞ்சுதலுக்கு மறுமொழியாக - இறைவன் முழு குர்ஆனையும் அடியார்க்கு அருளிச் செய்து அதன் மூலம் நேர்

வழியையும் காட்டிவிட்டான்.தோற்றுவாய் அத்தியாயத்தைப் பின்பற்றிப் போற்றுவோம் ஏகனின்

திருப்புகழை!

- சிராஜுல்ஹஸன்

Related Stories: