மூன்று முடிச்சு பாக்கியமருளும் முடிச்சூர் அம்பிகை

சென்னை - முடிச்சூர்

பிரம்ம வித்யாம்பிகை

சுடலைக் காடனான சதாசிவனுக்கும், இமவானுடைய புத்திரியான பார்வதிக்கும் திருமணம் செய்வதாக நிச்சயமாயிற்று. பரமசிவனார் தன் ஜடாபாரத்தை கழல் கற்றைகளாக திருத்தி அழகு சுந்தரராக அலங்கரித்துக் கொண்டார். பார்வதி மலையரசியாக பேரழகு பூண்டு நின்றாள். திருமால் தன் அன்புத் தங்கையோடு கண்களில் நீர் துளிர்க்க நடந்துவர சகல தேவர்களும் சிரசுக்குமேல் கரங்கள் உயர்த்தி ஹர ஹர மகாதேவா....என்று பிளிறினர். ரிஷிகள் ஒரு புறம் வேத, உபநிஷத வாக்கியங்களை கோஷமாகச் கூற அவ்விடத்தை மறையொலிகள் மத்தளமாக அதிரச் செய்தன. கின்னரர்களின் இன்னிசையும், நடன மாதர்களான ரம்பையும் ஊர்வசியும் சுழன்றெழுந்து நடனமாடினர்.

தேவர்கள் மகேசனின் அந்த திவ்ய முகத்தினையும், மகாவிஷ்ணுவையும், பார்வதி தேவியையும் அவர்கள் திருமுகப் பிரகாசத்தை வைத்த கண்வாங்காது கண்டு களித்தனர். பிரபஞ்சத்தையே அசைக்கும் மையச் சக்திகள் மானிட உருகொண்டு மணமக்களாக மாறிய கருணையை கண்டு முனிவர்கள் சிலிர்த்தனர். ஆனால், அவர்களுக்கு மட்டும் எதற்கு இந்த கோலம், ஏன் இத்தனை விளையாட்டு என்று மட்டும் தெரிந்திருந்தது. யுகம் தோறும் அருட்கோலம் காட்டி சகல உயிர்களை ஆட்கொண்டருளவே இந்தத் திருமணம் என்று புரிந்து வைத்திருந்தார்கள்.

வைகுந்தவாசன் ஈசனின் திருக்கரங்களை மெல்ல பிடித்து, தாமரை மலர்போன்ற தமது தங்கையான பார்வதியின் திருக்கரங்களோடு சேர்த்தார். கண்கள் மூடினார். நீர் தாரையாக பொங்கியது. அந்த இணைவுக்கோலம் ஜீவாத்மா, பரமாத்மா சேர்த்தியை சொல்லாமல் சொன்னது. கோர்த்த கரங்களோடு மணமேடையேறினார் மகேசன். வேதமோதும் அந்தணர்கள் வேதமூச்சாக விளங்கும் வேந்தன் சிவனுக்கு முன் மறையை மழையாகப் பொழிந்தனர். திருக்கூட்டம் தன்னிலை மறந்து திளைத்துக் கிடந்தனர். ஈசன், திருமாங்கல்யத்தை பார்வதி தேவியின் கழுத்தில் பூட்டி மணம் புரிந்தார்.

பார்வதி ஆனந்தத்திலும், நாணத்திலும், வெட்கத்திலும் கனிந்து சிவந்தாள். ஈசனார் கம்பீரக்கோலம் காட்டி அமர்ந்தார். திருமால் நெஞ்சு குழைந்து மாப்பிள்ளையையும், மணமகளையும் பார்த்தபடி நின்றிருந்தார். மூவுலகமும் கூடி நின்று வணங்கியது. பூவுலகான பூமி திருமணக் கோலத்தோடு தாங்களின் திருவடியை சுமக்க மாட்டேனா என்று தவமிருந்தது. மகாவிஷ்ணுவும், ஈசனும், உமையும் தம் திருக்கண்களை பூமி மீது படரச் செய்தனர். கோடானுகோடி உயிர்கள் சிலிர்த்தன. மாமுனிகளும், சீரடியார்களும், பாகவதோத்தமர்களும் மணக்கோலத்தோடு நாயகனையும், நாயகியையும் அவர்களோடு திருமாலையும் தரிசிப்பதற்காக காத்துக் கிடந்தனர்.

காலம் அருகில் வந்தது. நகரேஷூ காஞ்சி எனும் கச்சித் தலத்திற்கு சில கல் தொலைவுள்ள வில்வவனப் பிரதேசத்து மக்கள் ஆவலாக காத்திருந்தனர். வெகு தொலைவே எக்காளமும், மேள தாளத்தோடும் அகிலத்தையே அசைக்கும் சக்திகள் கருணை வடிவுகொண்டு வருவது பார்த்து எதிர்நோக்கி வரவேற்றனர். ஒவ்வொருவருக்கும் தாங்கள் காண்பது கனவா, நினைவா என்று ஐயம்மேலிட திகைப்போடு மணக்கோல நாதரை வணங்கியபடி நின்றனர். மேனிமுழுதும் மயிர்கூச்செரிய மகாதேவா... மகாதேவா... என்று இடையறாது சொன்னபடி இருந்தனர். பேரியக்க பிரபஞ்ச சக்தி எவ்வுருவிலும் வருவார் என்று ஒருவருக்

கொருவர் பேசிக் கொண்டனர். வில்வவனத்திற்குள் ஓரிடத்தில் சிவனார் உமையம்மையின் தளிர்கரம் பிடித்தபடி நிற்க, அருகேயே மகாவிஷ்ணு சங்கு சக்கரத்தோடு திருக்காட்சியும் அளித்தார்.

இப்படியோர் காணுதற்கரிய கோலம் காட்டியவர்கள் தம் திருக்கண்களால் அந்தப் பிரதேசத்தையே துழாவினார்கள். தங்களின் அருட்சக்தியை நிறைத்தார்கள். லிங்க உருவிலும், அர்ச்சாவதாரமான உருவத்திலும் உமையும், பெருமாளும் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். யுகம் தோறும் தாம் வில்வ வனத்தைவிட்டு அகலாது எல்லோரையும் காப்போம் என்று உறுதியாகச் சொன்னார்கள். லிங்கத்திற்குள் திரட்சியாக ஈசன் புகுந்தார். பார்வதியும், மாலவனும் தம்மையும் ஓரிடத்தில் நிறுத்திக் கொண்டார்கள். மூவரும் திருக்கூட்டத்தோடு வேறொரு தலத்தை உருவாக்கவும், தம் லீலா வினோத விளையாட்டை யுகம் யுகமாக தொடரவும் நகர்ந்தார்கள். ஆனால், அவர்கள் அம்சங்கள் அங்கே சிலா ரூபத்தில் தங்கின.

மக்களும், மாமுனிகளும் குதூகலமடைந்தார்கள். அழகிய ஆலயம் அமைத்தார்கள். பெருவிழாக்களும், ஆண்டுக்கு ஆண்டு திருமணமும் செய்து மகிழ்ந்தார்கள். மணமாகாதவர்கள் இத்தலத்தை அடைந்த வுடனேயே கல்யாணக் களை சூழப்பெற்றார்கள். ஈசனையும், அம்மையையும் வணங்கினார்கள். திருமணம் முடிந்து நன்றியாக ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்கள். காலச் சக்கரம் சுழன்றது. பாரதப்போர் தொடங்குவதற்கு முன்புள்ள பாண்டவர்கள் மறைந்துவாழும் நேரம் பார்த்து மீண்டும் இத்தலம் வேறொரு உருகொண்டது.

தனிமைத் தவமேவிய பாண்டவர்கள் ஒவ்வொருவரும் மூலைக்கொன்றாக சில நேரம் தவத்தில் சென்று ஆழ்வதுண்டு. தர்மர் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஒரு வனத்தின் மூலையில் சென்று தியானமியற்றுவதுண்டு. அதுபோல அர்ச்சுனரும், பீமனும் தமக்குள் ஆழ்ந்து தம்மை பலப்படுத்திக் கொள்வதுண்டு. ஒரு சமயம் ஈசன், அர்ச்சுனருக்கு பாசுபதாஸ்திரம் தந்ததுபோல பீமனுக்கும் தம் அருட்கணைகளால் வலிமையாக்க விரும்பினார். பீமன் வில்வத்தின் வாசத்தில் ஈர்க்கப்பட்டு இத்தலத்தினுள் நுழைந்தான். பேரழகனாக விளங்கும் மகேசனையும், மலையழகியான பார்வதியையும், சிருங்கார நாயகன் வைகுந்தனையும் தரிசித்து தாங்கொணா பேரின்பம் அடைந்தான்.

லிங்கவடிவினரான சிவனை நித்தமும் பூஜித்தும், அம்பாளை ஆராதித்தும், பெருமாளை பாமாலைகள் பாடியும் பரம பக்தனாக விளங்கினான். ஊரிலுள்ளோர் யாரோ பக்தர் என அவருடைய பெரும்பக்தியைக் கண்டு வியந்தனர். பீமன் தனக்குள் திடப்பட்ட பக்தியால் ஈசனின் முழு திருவருளையும் பெற்றான். அன்னை அவனுக்கு சகல வித்யைகளையும் தந்தாள். திருமால் தான் உடன் இருப்பதாக திருக்கண்ணால் சொன்னார். பீமன் வஜ்ஜிரம் பாய்ந்தவனான். சகோதரர்கள் ஒன்று கூடி வனவாசம் முடித்து கௌரவர்களோடு போர் தொடுத்தனர். ஜெய தேவதையான வெற்றிக்குரியவளை இத்தல நாயகர்கள் பாண்டவர்களோடு இருக்கச் செய்தனர். வெற்றியை உறுதிப்படுத்தினர். வில்வாரண்ய மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது.

பாண்டவர்களில் ஒருவரான பீமன்தான் இத்தலத்திற்கு வந்து பூஜைகள் செய்தார் என்று தெரிந்து வியப்பின் உச்சிக்கு சென்றார்கள். அதனாலேயே பீமேஸ்வரர் என்று திருநாமம் சூட்டி மகிழ்ந்தனர். சகல வித்யைகளையும் பீமனுக்கு அளித்தவளை வித்யாம்பிகை என்று போற்றித் துதித்தனர். திருமால் கோயில் கொண்டுள்ள தலங்களில் மிகவும் அரிய திருநாமமான தாமோதரன் எனும் பெயரை மாலவனுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். கோயிலோடு ஊரும் வளர்ந்தது. இன்று சிறப்புற்று விளங்குகிறது. கடந்த நூற்றாண்டு வரை இத்தலத்திற்கு மணமுடித்த நல்லூர் என்றே பெயர். திருமாங்கல்யத்தின் மஞ்சள் ஈரம் கூட காயாது மூன்று முடிச்சுகளோடு அம்பாள் இத்தலத்தில் காட்சி தந்ததால் முடிச்சூர் என்று வந்தது என்கிறார்கள்.

அதுபோல ஸ்ரீஅப்பாரியர் சுவாமிகள் எனும் வைணவப் பெரியார் நாலாயிரத்தையும் இத்தலத்தில் தொகுத்து, ஒரே மூச்சில் முடித்துக் கொடுத்ததால் முடிச்சூர் என்பதாகவும் செவி வழிச் செய்திகள் உள்ளன. இப்பேற்பட்ட கோயிலை தரிசிப்போம் வாருங்கள். சென்னை நகரின் நெரிசலில் நெறிபடாது தனித்து கனிந்த பழம்போல விளங்குகிறது, முடிச்சூர் கிராமம். தாம்பரம் தாண்டி காஞ்சிபுரம் செல்லும் சாலையில் இடது புறம் திரும்ப ஊரின் நேர்த்தியான தெருக்களும் அழகான வீடுகளும் நம்மை ஈர்க்கின்றன. சென்னைக்கு அருகே இப்படியொரு ஏகாந்தமான தலமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. சட்டென்று நம் கண்ணுக்கெதிரே மாபெரும் திருக்குளம் விரிகிறது.

அதையொட்டிய எழில் புனல் சூழ் என்று பதிக வரிகள்போல ரம்மியமான சூழல் மனதை மயக்குகிறது. அதன் மத்தியில் அழகாக அமைந்துள்ளது முடிச்சூர் சிவா விஷ்ணு ஆலயம். திருக்குளத்தில் கைகள் நனைக்கக்கூட மனம் வரவில்லை. அத்தனை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். குளத்தின் ஒரு புறம் கோயிலும் மறுபுறம் சிவசக்தி சிவாகம சமஸ்கிருத வித்யாலயா ட்ரஸ்ட் சார்பிலுள்ள வேதபாடசாலையும் கோயிலின் கீர்த்தியை பறைசாற்றுகின்றன. முக்காலமும் திருக்கோயிலில் எதிரொலித்துத் திரும்பும் பாடசாலை மாணவர்களின் வேதகோஷங்களால் உள்ளம் தளும்பி நிறைகின்றன. சிறிய சோலைகளுக்கு மத்தியில் ஆலயம் போல் அமைத்திருக்கிறார்கள்.

கோயிலின் வாயிலிலிருந்து சற்று உள்ளே திரும்ப நேரே பார்க்க அம்பாள் வித்யாம்பிகை வா என்று அழைக்கிறாள். ஓடோடி சென்று பார்க்கையில் மறுபக்கம் பீமேஸ்வரர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். வித்யாம்பிகை சுடர் விளக்கின் மத்தியில் மெல்லிய புன்னகை பூத்து நிற்கிறாள். வரத அபய ஹஸ்தங்கள் காட்டி, அங்குச, பாசங்கள் ஏந்தி காக்கிறாள். சகல வித்தைகளுக்கு ஆதார மாதா இவளை வணங்க பேரறிவும் கண நேரத்தில் கைகூடும். அதையும் தாண்டி இத்தலத்தின் பிரதான விஷயமே அம்பாளின் சந்நதிக்கருகே கட்டித் தொங்கவிடப்படும் திருமாங்கல்யமே ஆகும்.

மூன்று முடிச்சுகளோடு இங்கு வந்து காட்சி தந்ததால், திருமணமாகாதோர் அம்பாளின் பாதத்தில் தாலியை வைத்து வேண்டிக்கொள்கிறார்கள். அதை மீண்டும் அம்பாளுக்கு எதிரே முடிச்சுபோட்டு தாலியை கட்டுகிறார்கள். ‘‘தாயே நீ தொங்கத் தொங்க தாலி கட்டிக்கொண்டு இத்தலத்திற்கு வந்தாய். அதுபோல எனக்கும் மாங்கல்ய பாக்கியம் தா. வெகு சீக்கிரம் திருமணமாகி உன்னை தரிசிக்கும்படி செய்’’ என்று வேண்டிக்கொண்டு தாலியை கட்டுகிறார்கள். அதி ஆச்சரியமாக வெகு விரைவில் இத்தலத்திற்கு வந்து அம்பாள் எதிரே தாலி கட்டியவர்கள் மீண்டும் அதைப் பிரித்து அன்று கோயிலுக்கு வரும் சுமங்கலிக்கு தாம்பூலமாக வைத்துக் கொடுத்துவிடுவார்கள்.

ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பொதுவான பரிகாரமாக இத்தலத்தில் இந்த முறை அனுஷ்டிக்கப்படுகிறது. அருகிலுள்ள பீமேஸ்வரரும் அம்மையோடு

வீற்றிருந்து வலிமைமிகுந்த பீமனைப்போல மாங்கல்ய பலத்தை கூட்டுகிறார். நீடித்த சுமங்கலியாக வாழும் பெரும் பாக்கியத்தை அருள்கிறார். மூடிச்சூர் நாயகனாம் பீமேஸ்வரர் வாழ்வின் சிக்கல்களையும், தீர்க்க முடியாத சிக்கல்களையும் எளிய முடிச்சுகளாக்கி பிரித்துக் கொடுக்கிறார். மிகச் சிரத்தையான பூஜை முறைகளால் கோயிலின் சாந்நித்தியத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கிறார்கள்.

Related Stories: